வல்லமை என்ற சொலின் வடிவம் தான் வாராஹி சொல் வல்லமை செயல் வல்லமை இரண்டுக்குமே அதிகாரி இவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தீர்த்து வைப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள்.அச்வரூபா, மகாவாராஹி லகு வாராஹி மந்திர வாராஹி, வார்த்தூளி என்று பல வடிவங்கள். நான்கு கரம் எட்டு கரம் பத்து கரம் என்று பலப்பல கோலங்கள் கொண்டவள். .
சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள்.சப்த மாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வாராஹி. படைத் தளபதியாக திகழ்கிறாள் தேவி என்கிறது வாராஹி புராணம். பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள்.இந்த தேவிக்கு பஞ்சமீ தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமய சங்கீதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு. இவளது திருமாம் ஜெபித்து வழிபட்டால் எந்த காரியத்திலும் வெற்றி கிட்டும். ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ சக்ர தேவதைகளுள் மிகவும் மேன்மையானவர். வேண்டுவோருக்கு வேண்டியவற்றை விரைவில் அருளுபவள். நமது உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி.

அந்தி வேளைக்குப் பிறகு வாராஹியை வழிபடுவது சிறந்தது. வாராஹிக்கு இரவு பூஜை பன்மடங்கு பலன்களை தருகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் சூரிய உதயத்திற்கு முன்பும் அவள் வணங்கப்படுகிறாள். தேவிக்கு தீபத்தை வடக்கு நோக்கி ஏற்றி, மணம் வீசும் தூபத்தை காட்ட வேண்டும். வேகவைத்த உருளைக்கிழங்கு, உளுத்தம் பருப்பு, மாதுளைப் பழம், புளி சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை வாராஹி தேவிக்கு உகந்த பிரசாதமாகும். வாராஹி மந்திரங்களை 3, 21 அல்லது 108 முறை உச்சரிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் தீப ஆராதனை செய்ய வேண்டும். 48 நாட்கள் வாராஹியை வழிபடுவது மிகவும் சக்தி வாய்ந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் தேவியின் பரிபூரண அருளாசிகள் கிட்டும். நீங்கள் வேண்டியது நிறைவேறும்.
பஞ்சமி திதி அன்னையின் வழிபாட்டிற்கு உரிய திதி ஆகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வாராஹியை வழிபடலாம். பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக் கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி.
கிருத்திக்கை, பூரம், மூலம், ரேவதி ஆகியநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக வழிப்பட வேண்டும். அதுபோல மகரம், கும்பம் ராசிக்காரர்களும் வழிபடலாம். அவ்வாறு வழிபட்டால் அவர்களுக்கு கஷ்டங்கள் ஏதும் வராது. மேலும் சனி ஆதிக்கம் உள்ளவர்கள் மற்றும் சனி திசை நடப்பவர்களும் வாராஹியை வழிபடலாம்.
கூப்பிட்ட குரலுக்கு வரும் வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலை அடையலாம். எதிரிகளை அன்பால் வெல்லலாம்.. எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடையலாம்.. வராகியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்
March 13, 2026
February 20, 2026
February 17, 2026