ஒவ்வொரு மாதமும் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் தோன்றும் சந்திரன், மூன்றாம் பிறை சந்திரன் என்று கூறுவார்கள். இந்த நாளில் சந்திரனை பார்ப்பது மிகவும் சிறப்பு. மற்றும் சந்திரனை வழிபடுவது அதைவிட சிறப்பு. அப்படி என்ன மூன்றாம் பிறைக்கு சிறப்பு? ஏன் இன்றைய தினம் சந்திரனை வழிபட வேண்டும்? இந்த நாளில் சந்திரனை வழிபடுவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்? மூன்றாம் பிறையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
“பித்தா பிறை சூடி பெருமாளே அருளாளா” என்பது சுந்தரரின் தேவாரப் பாடல் வரி ஆகும். தந்தையாக விளங்கும் சிவ பெருமான் பிறையினை தனது தலையில் சூடி உள்ளார். பாற்கடலைக் கடைந்தபோது, அமுதத்துடன் சேர்த்து சந்திரன், சூரியன், ஆலகால விஷம், கௌரி, விஷ்ணுவின் மனைவி லட்சுமி, காமதேனு, சரஸ்வதி, கஜலட்சுமி, விஷ்ணுவின் ஆயுதம் சக்ரம், வாசுகி பாம்பு, யானை, குதிரை, நரி, கடம் மற்றும் பிற பொருள்களும் வெளிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே சந்திரன் லக்ஷ்மி தேவிக்கு சகோதரர் ஆகிறார். அவரை வணங்குவதன் மூலம் லக்ஷ்மி தேவியின் அருளைப் பெறலாம்.
சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே மூன்றாம் பிறையை காணவேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
சந்திரனை மனோகாரகன் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எனவே சந்திரனை வழிபட சந்திரனின் காரகம் சம்பந்தமான விஷயங்களை நாம் மேம்படுத்திக் கொள்ள முடியும். பொதுவாக அமாவாசை முடிந்த அடுத்த நாளில் சந்திரன் கண்ணனுக்கு புலப்படாது. அமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் தான் சந்திரன் கீற்றாக, பிறையாக காட்சி தருவார். அன்றைய தினம் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும்.
காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும். எனவே, இந்த வேளையில் சந்திர தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும். இதற்காகவே பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக ‘சந்திர தரிசனம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையை பார்த்தால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையைக் கண்டால் சகல பாவங்களும் தொலையும் எனவும் கூறியுள்ளார்கள். சந்திரன் லக்ஷ்மி தேவியின் சகோதரராக விளங்குவதால் அவரை வணங்குவதன் மூலம் லக்ஷ்மி தேவியின் அருளை நாம் பெற இயலும். மேலும் இன்றைய தினம் புதன் கிழமை ஆகும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். எனவே விஷ்ணு பகவானுக்கு உரிய நாளான அன்றைய தினம் அவரது திரு மார்பில் உறையும். திருமகளின் அருளும் நமக்கு கிடைக்கும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025