Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
புரட்டாசி சனிக்கிழமையும் கோவிந்தா கோஷமும் – ஆன்மீகமும் பாரம்பரியமும்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

புரட்டாசி சனிக்கிழமையும் கோவிந்தா கோஷமும் – ஆன்மீகமும் பாரம்பரியமும் கலந்த வழிபாடு

Posted DateSeptember 5, 2025

தமிழர்களின் வாழ்க்கையில் ஆன்மீகம் மற்றும் பாரம்பரியம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. வருடத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் தனித்துவமான ஆன்மீகச் சிறப்புகள் உண்டு. அவற்றில் புரட்டாசி மாதம் மிக முக்கியமானது. இந்த மாதம் விஷ்ணு பகவானுக்குப் பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்டது எனப் புராணங்கள் கூறுகின்றன. குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகள், திருவேங்கடமுடையான் அருளைப் பெறுவதற்கு மிகவும் சிறப்பான நாட்களாக கருதப்படுகின்றன. அந்நாளில் பக்தர்கள் விரதம் இருந்து, நாமசங்கீர்த்தனம் செய்து, பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம்.

கோவிந்தா கோஷம்

இந்த வழக்கங்களில் மிகவும் தனித்துவமானதும், மக்களை ஒன்றிணைக்கும் பழக்கமாகவும் விளங்குவது கோவிந்தா கோஷம் போட்டு அரிசி வாங்குவது என்ற பாரம்பரியம். இன்று பல கிராமங்களிலும் சில நகரப் பகுதிகளிலும் கூட, பக்தர்கள் குழுவாக ஒன்று சேர்ந்து “கோவிந்தா, கோவிந்தா” எனப் பெருமாளின் திருநாமத்தைச் செபித்து வீடு வீடாகச் சென்று அரிசி, பருப்பு மற்றும் தானியங்கள் சேகரிக்கின்றனர். இதன் பின்புலமும், தாத்பரியமும் மிகவும் ஆழமானவை.

கோவிந்தா என்றால் என்ன?

கோவிந்தா” என்ற சொல்லின் அர்த்தத்தைப் பார்ப்போம். கோவிந்தன் என்ற பெயர் பகவான் விஷ்ணுவின் பெயராகும். இதன் பொருள் பசுக்களையும், உலகத்தையும் வேதங்களையும் காத்து வாழ வைப்பவன் என்பதாகும். பக்தர்கள் இந்த நாமத்தைச் ஜெபிக்கும் போது, அவர்களின் உள்ளத்தில் பக்தி உணர்வு வளர்கிறது. மனம் தூய்மையடைகிறது. கலியுகத்தில் பகவானின் நாமத்தைச் ஜெபிப்பதே மோட்சத்திற்கு வழி எனப் பகவான் சொன்னார். அந்த நாமசங்கீர்த்தனத்தை வாழ்க்கையில் நிறைவேற்றும் நடைமுறையான வழியாகவே இந்த வழக்கம் தோன்றியது.

 புரட்டாசி சனிக்கிழமை அன்னதானம்

புரட்டாசி சனிக்கிழமைகளில், பல இடங்களில் பக்தர்கள் குழுவாகச் சேர்ந்து வீடு வீடாகச் சென்று “கோவிந்தா, கோவிந்தா” என்று கோஷம் போட்டு அரிசி, பருப்பு, நெய், தானியங்கள் போன்ற பொருட்களை சேகரிப்பார்கள். ஆனால் ஏன் அரிசி வாங்க வேண்டும்? இது ஒரு சாதாரணப் பொருள் சேகரிப்பாக மட்டும் அல்ல. இந்தச் செயல் அன்னதானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. வேதங்களில் அன்னம் உயர்ந்த தானம் என்று கூறப்படுகிறது. “அன்னம் பஹு குர்வீத” என்று உபநிடதங்கள் சொல்கின்றன; அதாவது, “உணவைப் பகிர்ந்து வையுங்கள்” என்பதே அந்த உண்மையான பொருள். பக்தர்கள் வீடு வீடாகச் சென்று அரிசி சேகரிப்பது, கோவிந்த நாமத்தைச் செபிப்பது – இரண்டுமே தர்மம் செய்யும் பாதையை அடையாளப்படுத்துகிறது. பழைய காலங்களில், சமூகத்தில் உள்ள அனைவரும் கோயில் நிகழ்வுகளில் பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, பணக்காரர், ஏழை எனப் பிரிவின்றி, அனைவரும் பகவானின் பணி செய்வதற்கான வழி தேடப்பட்டது. அப்போது வீடு வீடாகச் சென்று அரிசி சேகரிக்கும் பழக்கம் தோன்றியது. ஒருவன் ஒரு முத்து அரிசி கொடுத்தாலும் போதும்; அவன் மனதில் பகவானுக்கான அன்பு இருந்தால் அதுவே பெரும் புண்ணியம். இதனால் சமத்துவமும், பக்தி பிணைப்பும் வளர்ந்தது.இந்த வழக்கம் ஒரு சாதாரண பொருள் சேகரிப்பல்ல;

அதில் ஆழமான ஆன்மீக அர்த்தமும் சமூக நோக்கமும் உள்ளது. சேகரிக்கப்பட்ட அரிசி கோயிலில் கொண்டு சென்று பெருமாளுக்கு நிவேதனம் செய்து, பிறகு பிரசாதமாக பகிர்ந்து வைப்பார்கள். சேகரிக்கப்பட்ட பொருட்கள் அன்னதானமாக வழங்கப்படுவதால், பசித்தோர் உணவுபெறுகின்றனர். இந்த செயல் மூலம் அன்னதானம் என்ற உயர்ந்த தர்மம் நிறைவேறுகிறது.. இந்த வழக்கம், பணக்காரர் – ஏழை என வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து பகவானின் பணி செய்வதற்கான வழியை உருவாக்குகிறது. சிறுவர்கள் கூட கோஷம் போட்டு வீடு வீடாகச் செல்லும் போது, அவர்களுக்குள் பகவானின் நாமம் பதிகிறது.

இந்த வழக்கம் ஆன்மீகப் பொருளையும், சமூகப் பொருளையும் இணைத்துச் செல்லும் ஒரு சிறந்த முறையாக உள்ளது. ஆன்மீகப் பார்வையில், பகவானின் நாமத்தைச் செபிப்பது மனதை தூய்மைப்படுத்துகிறது; அஹங்காரத்தை அகற்றுகிறது. வீடு வீடாகச் சென்று “கோவிந்தா” என்று சொல்லி அரிசி கேட்பது, “நான்” என்ற பெருமையை குறைத்து, “அவன் அருளால் தான் நமக்குச் சாப்பாடு” என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சமூகப் பார்வையில், இது பகிர்ந்து வாழும் மனப்பான்மையை உருவாக்குகிறது. நமக்குக் கிடைத்ததை மற்றவர்களுடன் பகிர்ந்தால் தான் வாழ்வில் பூரணத் திருப்தி கிடைக்கும் என்பதையும் இது கற்றுத் தருகிறது.

நவீன காலத்தில் இவ்வழக்கம் சில இடங்களில் குறைந்து விட்டாலும், பல வைஷ்ணவ சமுதாயங்கள் இதை இன்னும் பின்பற்றி வருகின்றன. சிலர் இந்த வழக்கத்தை மாற்றி, கோயிலில் நேரடியாக நிவேதனமாக அரிசி, பருப்பு கொண்டு சேர்ப்பதோடு, சிலர் ஆன்லைன் பங்களிப்புகளின் மூலம் அன்னதானத்திற்குப் பங்கு சேர்கின்றனர்.

சமத்துவமும் சமூக ஒற்றுமையும்

புரட்டாசி சனிக்கிழமையில் கோவிந்தா கோஷம் போட்டு அரிசி வாங்குவது என்பது சாதாரண பழக்கம் அல்ல; அது நாமசங்கீர்த்தனம், பக்தி, அன்னதானம், சமத்துவம், சமூக ஒற்றுமை ஆகியவற்றை ஒருங்கே நிறைவேற்றும் ஆன்மீக வழிபாடு.  இந்த வழக்கம் எப்போது தோன்றியது என்பதைப் புரிய வேண்டுமானால், பழைய சமூகச் சூழலைப் பார்க்க வேண்டும். பழைய காலங்களில் புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாடு பெரும் உற்சாகத்துடன் நடத்தப்பட்டது. அப்போது, கோயில் விழாக்களுக்கு தேவையான பொருட்களை சமூகமாகச் சேகரிக்கும் வழக்கம் இருந்தது.

அதிலிருந்து தான் கோவிந்தா கோஷம் போட்டு அரிசி சேகரிக்கும் வழக்கம் உருவானது. இந்த வழக்கம், திருப்பதி வழிபாட்டின் தாக்கத்தாலும் பரவியது. ஏனெனில், திருப்பதி வேங்கடேஸ்வர பெருமாளின் திருநாமம் “கோவிந்தா” என்பதால், அந்த நாமத்தைச் செபித்து சேவை செய்வது புனிதமாகக் கருதப்பட்டது.