Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
மகாளயத்தில் தவிர்க்க வேண்டிய 10 முக்கிய தவறுகள் – அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மகாளயத்தில் தவிர்க்க வேண்டிய 10 முக்கிய தவறுகள் – அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது

Posted DateSeptember 11, 2025

மகாளயம் (அல்லது மகாளயபட்சம்) என்பது புரட்டாசி மாத பௌர்ணமிக்குப் பிறகு வரும் 15 நாட்களைக் குறிக்கும். இந்தப் பதினைந்து நாட்களிலும் நம் முன்னோர்கள் பூமியை நோக்கி வருவதாகவும், அப்போது அவர்களுக்கு நாம் அளிக்கும் தர்ப்பணம், பிண்டம், மற்றும் தானம் போன்ற செயல்கள் மிகவும்  நமக்கு புண்ணியத்தைச் சேர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. மகாளயம் என்ற சொல்லுக்கு ‘பெரிய கூட்டம்’ என்று பொருள், மேலும் பட்சம் என்பது ‘பாதி மாதம்’ அல்லது 15 நாட்களைக் குறிக்கிறது. அதாவது இந்த பதினைந்து நாட்களில் நமது முன்னோர்கள் பூமிக்கு கூட்டமாக வருவார்கள் என்பது ஐதீகம்.

மகாளயத்தின் முக்கியத்துவம் 

மகாளய பட்சத்தின் போது, நம் முன்னோர்களின் ஆத்மாக்கள் பூமிக்கு வந்து நம்முடைய பூஜைகளையும், தானங்களையும் ஏற்றுக்கொள்வதாகக் கருதப்படுகிறது. இந்த நாட்களில், பித்ருக்களுக்கு தர்ப்பணம், அன்னதானம், ஹோமம், ஜபம் போன்ற கர்மங்கள் செய்வதால் அவர்கள் திருப்தி அடைந்து, தங்களின்  வம்சத்தினருக்கு செல்வம், சந்ததி, ஆரோக்கியம், முன்னேற்றம் ஆகியவற்றை அருளுவார்கள் என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாளயபட்சத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு  ஆஸ்ட்ரோவேதில் 15 நாட்கள் தர்ப்பணம் 5 புரோகிதர்கள் நடத்தும் பித்ரு பூஜை, தனிப்பட்ட த்ரிகண்ட ஹோமம், தில ஹோமம் மற்றும் பல சடங்குகள் இடம் பெறுகின்றன

 தவிர்க்க வேண்டிய 10 முக்கிய தவறுகள்

ஆனால், இந்த காலத்தில் சில தவறுகளைச் செய்வது பித்ருக்களின் ஆசிகளை இழக்கவும், வாழ்க்கையில் பல தடைகளை சந்திக்கவும் காரணமாக அமைகிறது.  எனவே மகாளயத்தில் தவிர்க்க வேண்டிய 10 முக்கிய தவறுகள் பற்றி அனைவரும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.அதனைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

1. தர்ப்பணம் செய்யாமல் இருப்பது

தர்ப்பணம் செய்வதே மகாளயத்தின் முதன்மை கர்மம். எள், தர்ப்பம், நீர் கொண்டு பித்ருக்களின் பெயரை நினைத்து தர்ப்பணம் செய்வது மிக அவசியம். இதை தவிர்த்தால் பித்ரு தோஷம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. குறைந்தபட்சம் அந்த நாளில் வீட்டில் நீர் தானம் செய்தாலும் பித்ருக்களை நினைத்து செய்ய வேண்டும்.

2. அன்ன தானம் செய்யாமல் இருப்பது

பித்ருக்கள் அன்ன தானத்தினால் திருப்தி அடைவார்கள். மகாளயத்தில் பிச்சைக்காரர்கள், யாதவர்கள், பிராமணர்கள், பசியோடு இருக்கும் எவருக்கும் உணவு வழங்காமல் இருப்பது மிகப் பெரிய தவறு. உணவு தானம் செய்வது பித்ருக்களை மட்டுமல்லாமல் தேவர்களையும் மகிழ்விக்கும்,  புண்ணியம் தரும்.

 3. வீடு சுத்தமின்றி சடங்கு செய்வது

சுத்தம் என்பது பித்ரு வழிபாட்டின் அடிப்படை. வீடு, பூஜை இடம், தேவைப்படும் பிற பொருட்கள் என அனைத்தும் சுத்தமாக இல்லாமல் தர்ப்பணம் செய்வது பித்ருக்களுக்கு செல்லாது. எனவே மகாளயத்தின் போது வீட்டைச் சுத்தப்படுத்தி, ரம்யமாக  வைத்துக்கொண்டு பூஜை நடத்துவது அவசியம்.

4. உணவை வீணாக்குவது

உணவு வீணாவதே மிகப் பெரிய பாவமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மகாளயத்தில் சமைக்கப்படும் உணவு தேவையான அளவில் மட்டுமே இருக்க வேண்டும். மீதமுள்ள உணவை பறவைகள், பசுக்கள், நாய்கள் போன்ற உயிர்களுக்கும் பகிர்ந்து வைக்க வேண்டும். ஆனால் காகத்திற்கு உணவு படைக்கும் போது மீதமுள்ள உணவை அளிக்கக் கூடாது. உணவு உண்பதற்கு முன்பே காக்கைக்கு உணவு வைத்து விட வேண்டும்.

5. இறை வழிபாட்டை புறக்கணித்தல்

சிலர் பித்ரு பூஜை மட்டும் செய்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சாஸ்திரப்படி தெய்வ வழிபாடு மற்றும் பித்ரு வழிபாடு இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இறைவனை வழிபட்டால்தான் பித்ரு கர்மங்கள் பலனளிக்கும்.எனவே முதலில் இறைவனை வழிபட வேண்டும்..

6. பொய், அநியாயம், தீய செயல்கள் செய்வது

பொதுவாக யாரையும் ஏமாற்றுவது, பொய் சொல்லுவது, அநியாயம் செய்வது, பிறருக்கு தீங்கு செய்ய முயற்சிப்பது கூடாது. மகாளயபட்சத்தில் அதனை செய்வது  மிகக் கடுமையான தவறு ஆகும்.  இந்த காலத்தில் மனம் தூய்மையுடனும், நல்ல சிந்தனையுடனும் இருக்க வேண்டும்.

7. பவித்ரமின்றி சடங்கு செய்வது

தர்ப்பணம் அல்லது எள்ளும் நீரும் இரைக்கும் போது கையில் பவித்ரம் அணிந்து கொள்ள வேண்டும். பவித்ரம் என்பது புல்லால் மோதிரம் போல செய்து கையில் அணிந்து கொள்வதாகும்.  பவித்ரம் அணியாமல் தர்ப்பண சடங்குகளை செய்தல் கூடாது. மகாளயத்தில் பவித்ரம்  அணிந்து சடங்கு செய்வது என்பது முன்னோர்களுக்குச் செய்யும் பித்ரு கடமைகளில் ஒரு பகுதியாகும். பவித்ரம் அணிவதன் மூலம், சடங்குகள் செய்யும் ஒருவர் தூய்மையாகவும், சக்திவாய்ந்தவராகவும் மாறி, முன்னோர்களின் ஆசிகளைப் பெற்று அவர்களின் ஆன்மா இறைவனடியை அடைய உதவும் என்பது நம்பிக்கை.

8. மனம் தூய்மையின்றி தானம் செய்வது

மனத்தால் விருப்பமின்றி, பிறர் கட்டாயப் படுத்துவதால் மட்டுமே தானம் செய்தால் அதற்குப் பலன் கிடைக்காது. பித்ருக்கள் அன்புடனும் பக்தியுடனும் செய்யப்பட்ட தானங்களையே ஏற்றுக்கொள்வார்கள். எனவே தானம் செய்யும் போது மனம் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

9. கோபம், சண்டை, கெட்ட சொற்கள் பேசுவது

மகாளயபட்சத்தில்  சண்டையிடுவது, கோபப்படுவது, கெட்ட சொற்களைப் பேசுவது எல்லாம் தவிர்க்க வேண்டியவை. ஏனெனில் அந்த நேரத்தில் நமது மனோபாவமே பித்ருக்களுக்கு எட்டும். நம்மால் உண்டாகும் துயரம் பித்ருக்களுக்கும் துக்கத்தை உண்டாக்கும்.

10. பித்ருக்களை முற்றிலும் மறந்து விடுவது

மிகப் பெரிய தவறு, பித்ருக்களை நினைவில் கொள்ளாமலிருப்பதே. இந்த நாட்கள் முன்னோர்களுக்காகவே உண்டானது. அவர்கள் செய்த நன்மைகளால் தான் நாமும் இன்றைய வாழ்க்கையை நடத்துகிறோம். எனவே அவர்களை நினைத்து குறைந்தபட்சம் ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்தாலும் அது பெரிய புண்ணியம் தரும்.

மகாளயம் என்பது நமது முன்னோர்களுக்கான நன்றிக் கடன் செலுத்தும் நேரம். இந்த காலத்தில் மேற்கண்ட 10 தவறுகளை தவிர்த்து, சுத்தமும் பக்தியும் நிறைந்த கர்மங்களைச் செய்வது அவசியம். அப்படி செய்தால் பித்ருக்கள் திருப்தியடைந்து, குடும்பத்திற்கு அமைதி, வளம், ஆரோக்கியம், சந்ததி, செல்வம் அனைத்தையும் அருள்வார்கள். “பித்ரு தர்ப்பணம் செய்வது பித்ருக்களை மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள தலைமுறைகளையும் காக்கும்” என்பது சாஸ்திரங்களின் வலியுறுத்தல். எனவே இந்த மகாளயத்தில் தவறுகளை தவிர்த்து பித்ருக்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம்.