நவக்கிரகங்களில் சனியைக் கண்டு பயப்படாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். சனி பகவானை போல கொடுப்பவரும் கிடையாது. கெடுப்பவரும் கிடையாது என்று சொல்லுவார்கள். நமது கர்ம வினைகளுக்கு ஏற்ப தான் சனி பகவான் நமக்கு பலன்களை அளிப்பார். நமது கர்ம வினை நல்லதாக இருந்தால் நன்மைகளை அள்ளிக் கொடுக்கத் தயங்க மாட்டார். நமது கர்ம வினை தீயதாக இருந்தால் படிப்பினையை தரவும் தயங்க மாட்டார். .
நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற கிரகம் இவர் ஒருவர் மட்டுமே. சனி பகவானை, கர்மகாரகன் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அதாவது ஒருவர் செய்யும் வினைகளின் நன்மை, தீமைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கக் கூடியவர்.
நவகிரகங்களுக்கும் தனியாக கோவில்கள் உள்ளன. அது போல் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவில் பல பகுதிகளிலும் சனீஸ்வர பகவானுக்கு என்று தனிக் கோவில்கள் உள்ளன.
இந்தியாவின் புகழ்பெற்ற சனி பகவான் கோவில்கள் :
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இக்கோவில் நள தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரரை வழிபட்டால் நம்முடைய துன்பங்கள் யாவும் நீங்கும். நள மகாராஜன் இங்குள்ள சனீஸ்வரரை வழிபட்டுதான் சனி தோஷம் நீங்க பெற்றான்.
தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரர் சுயம்புவாக தோன்றியவர். லிங்க வடிவில், பெரிய உருவில் தனித்து காட்சி தருகிறார். இந்த குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் “ஆடிப் பெருந்திருவிழா” என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் சனிபெயர்ச்சித் திருவிழா” சிறப்பாக நடத்தப்படுகிறது.
வாலாஜா அருகில் உள்ள வன்னிவேடு எனும் ஊரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் ஒற்றைக் காலில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். வீடு மற்றும் கட்டடம் கட்டும் பணியைத் துவக்குவோர், அது தடங்கலின்றி நடக்க, சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு, 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து, எள் தீபமேற்றி வழிபடுவது விசேஷம்.தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டியும், கசப்பான அனுபவங்களை சனி பகவானிடமே அர்ப்பணித்து விடுவதாகவும், இனி, அவ்வாறு நடக்கக்கூடாது என்றும் இந்த வேண்டுதலைச் செய்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வரர் கோவில் பிரகாரத்தில் சூரியனும், சனீஸ்வரரும் வழக்கத்திற்கு மாறாக, நேருக்கு நேர் பார்த்தவாறு காணப்படுகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் 17 கி மீ தூரத்தில் உள்ள கல்பட்டு எனும் ஊரில் உள்ள சனி பகவான் கோவிலில் இடது காலை பீடத்தின் மீதும், வலது காலை வாகனத்தின் மீதும் வைத்தவாறு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
சென்னை ஆதம்பாக்கம் விஸ்வரூப ஸ்ரீ சர்வ மங்கள சனீஸ்வர பகவான் கோவிலில் சனீஸ்வரர் 6 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தருகிறார். இது வட திருநள்ளாறு என்று போற்றப்படுகிறது.
தஞ்சையின் நாச்சியார் கோவில் அருகே, ராமநாத சுவாமி கோவிலில், சனி பகவான் வேறு எங்கும் காணக் கிடைக்காத வகையில் தன இரு மனைவிகளான மந்தா தேவி, ஜேஷ்டா தேவி மற்றும் மகன்கள் மாந்தி, குளிகன்,தசரத மகாராஜாவுடன் குடி கொண்டிருக்கிறார். குடும்பத்துடன் இந்து அரு புரிகிறார்
மயிலாடுதுறை அருகே குத்தாலம் கிராமத்தில் உள்ள சோழீஸ்வரர் கோவிலில், அடி காண முடியாத பாதாள சனீஸ்வரர், கையில் அமிர்த கலசத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இவர் சுயம்பு மூர்த்தி.
மகாராஷ்டிரா மாநிலம் சனி சிங்கனாபூர் எனும் ஊரில் சனீஸ்வரர் சுயம்புவாக, ஐந்தே முக்கால் அடி உயரத்தில், கருப்பு நிறத்தில் காட்சி தருகிறார். இந்தக் கோயில் ஒரு “ஜக்ருத தேவஸ்தானம்” (உயிருள்ள கோயில்) அதாவது, கோயில் வளாகத்தில் ஒரு தெய்வம் இன்னும் வாழ்கிறது. இந்தக் கோயிலின் பிரதான தெய்வம் சுயம்பு, அவர் பூமியிலிருந்து கருப்பு நிறக் கல்லின் வடிவத்தில் தோன்றினார். கலியுகத்தின் தொடக்கத்திலிருந்தே இந்தக் கடவுள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர் செல்லும் வழியில் வேன்வீட்டா எனும் ஊரில் சனி பகவான் கோவில் உள்ளது. 8 கிரகங்கள் வரிசையாக இரண்டு பாகங்களாக காணப்படுகின்றன. சனீஸ்வரர் மிகப்பெரிய உருவில் எருமை வாகனத்தில், கிரகங்களுக்கு முன்னால் அமர்ந்து உள்ள கோலத்தில் காட்சி தருகிறார்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025