Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
Ghee Coconut To Sabarimala Ayyappa Temple | சபரிமலை செல்பவர்கள் நெய் தேங்காய் கொண்டு செல்வது ஏன் தெரியுமா?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சபரிமலை செல்பவர்கள் நெய் தேங்காய் கொண்டு செல்வது ஏன் தெரியுமா?

Posted DateNovember 23, 2023

கார்த்திகை மாதம் வந்தாலே பல திருவிழாக்கள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அவற்றுள் ஒன்றாக வருவது ஐயப்ப வழிபாடு எனலாம். ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை  முதல் நாள் மாலை அணிந்து ஐயப்பனுக்கு விரதம் இருப்பார்கள். இந்த விரத்தத்தை அவர்கள் ஒரு மண்டலம் கடை பிடிபிப்பார்கள். ஒரு மண்டலம் விரதம் இருந்து  இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று வருவார்கள். அவ்வாறு செல்லும் போது இரு முடியில்  நெய்  தேங்காய்  வைத்து கொண்டு செல்வார்கள்.

இரண்டு பகுதிகளுள்ள இருமுடிக்கெட்டின் முன் பகுதியில் நெய்த்தேங்காவும், ஐயப்பனுக்கும் பிற தேவர்களுக்குமான வழிபாட்டுப் பொருட்களும் நிறைக்கப்படுகின்றன. பின்னர் நூலால் பத்திரமாகக் கட்டிவைப்பர். இருமுடிக்கெட்டின் இப்பகுதி ஆன்மீக சக்தி வாய்ந்ததாகும். கோயில் வளாகத்தில் ஆங்காங்கே உடைக்கவேண்டிய தேங்காய்கள் கட்டின் அடுத்த பகுதியில் நிறைக்கப்படுகின்றன.

நெய் தேங்காயின் தத்துவம்

நமது வழிபாட்டுமுறை ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு தத்துவம் இருக்கும். அந்த வகையில் சபரி மலைக்கு நெய்  தேங்காய் கொண்டு செல்வதன் பின்னால் உள்ள தத்துவம் என்னவென்று இந்தப் பதிவில் காண்போம்.

பக்தர்கள் சபரி மலைக்கு செல்லும் நாள் அன்று குருசாமி பூஜைகளை செய்வார்கள். ஆரம்ப பூஜைகளுக்குப் பின் தேங்காயில் பசு நெய் நிறைக்கப்படுகிறது. முன்னதாக தேங்காய் ஓட்டின் மீது இருக்கும் நார்களை நீக்கி தேங்காய் சுத்தமாக்கப்படுகிறது; தேங்காய் நீர் ஒரு சிறு துளை வழியாக வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு செய்வது, உள்ளத்திலிருந்து லௌகீக இன்பங்களை வெளியேற்றுவதை குறிக்கும்.  பின்னர் அதில் நெய்யை நிரப்புவார்கள். இந்த நெய்யை ஐயப்ப பக்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் என அனைவரும் அதில் ஊற்றுவார்கள். அவ்வாறு ஊற்றும் போது சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் எழுப்புவார்கள். இது ஆன்மீகச் சிந்தனைகளை நிறைப்பதன் குறியீடாகக் கருதப்படுகின்றது. இவ்வாறாக ஐயப்பனுக்காக நெய் நிறைக்கப்படும் தேங்காய் ‘நெய்த்தேங்காய்’ என அறியப்படுகின்றது.

தேங்காய் என்பது நம் உடலைக் குறிக்கிறது.  நெய் என்பது ஆத்மாவைக் குறிக்கிறது. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து அதாவது நம்முடைய உடல், ஆன்மாவை அவரிடம் அர்ப்பணிக்கும் பொருட்டு நெய் தேங்காயாக மாற்றி இருமுடியில் கட்டி எடுத்துச் செல்வதாக ஐதீகம். 18 படிகளை ஏறி தர்ம சாஸ்தாவை தரிசனம் செய்த பின்னர், குருசாமியின் கையால் அந்த தேங்காயை உடைத்து அதில் உள்ள நெய் எடுத்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்ய கொடுக்கப்படுகிறது.


அந்த நெய்யால் சுவாமியை அபிஷேகம் செய்யும் போது நம் ஆத்மா பரந்தாமனை நோக்கி செல்கிறது. அதனால் தான் நாம் நெய் தேங்காய் எடுத்துச் செல்கிறோம். பிறகு அந்த தேங்காயை எரியும் ஹோம குண்டத்தில் போட்டு விடுவார்கள். அதாவது நமது உயிரை சுவாமி ஐயப்பனுக்கும் உடலை இந்த நெருப்பிற்கும் அர்ப்பணிக்கும் தத்துவம்.