மனிதர்களாகப் பிறந்த நமக்கு ஆசைகளுக்கு முடிவே கிடையாது. ஒன்று கிடைத்த பின் மற்றொன்று. அது கிடைத்தபின் வேறொன்று இப்படி நமது ஆசைகள் நமது வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டு தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் பொதுவானது. நமது ஆசைகள் நிறைவேற நாம் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு சில ஆசைகள் சிறு முயற்சிகளில் நிறைவேறி விடுகிறது.ஒரு சில எவ்வளவு முயன்றும் எளிதில் நிறைவேறாமல் போகலாம். நமது அன்றாட வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கூட வெற்றி காண நாம் சில சமயம் போராட வேண்டியிருக்கிறது. நமது முயற்சியுடன் இறை அருளும் இருந்தால் தான் நாம் வாழ்வில் வெற்றி காண முடியும். இறை நம்பிக்கை உள்ள அனைவரும் தமது ஆசைகள் நிறைவேற இறைவனின் ஆசியையும் வேண்டுவார்கள்.
நமது விருப்பங்கள் எண்ணங்களாக மாறும். எண்ணங்கள் செயல்களாக மாறும். அவ்வாறு மாறும் செயல்கள் தடையின்றி நடை பெற முழுமுதற் கடவுளான கணபதியை வணங்குவது சிறப்பு. நாம் மேற்கொள்ளும் எந்தவொரு செயலையும் தடையின்றி நடத்த விநாயகரின் அருள் வேண்டும். எனவே தான் எந்தவொரு செயலை ஆரம்பித்தாலும் நாம் முதலில் விநாயகரை வணங்குகிறோம்.
விநாயகர் விக்னங்களை நீக்கக்கூடிய தெய்வம். விக்னம் என்றால் தடை. அதனை நீக்குபவர் விநாயகர். விநாயகப் பெருமான் வணங்குதற்கு மிகவும் எளியவர். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் ஒரு முறையைப் பற்றி தான் இந்தப் பதிவில் காணப் போகிறோம்.

இது அதிக செலவு இல்லாத பக்தி மட்டுமே தேவைப்படும் ஒரு வழிபாடு ஆகும். இந்த வழிபாட்டிற்கு நீங்கள் விநாயகர் ஆலயம் சென்று வழிபட வேண்டும். எந்த ஆலயமாக இருந்தாலும் பரவாயில்லை. அங்கு விநாயகர் இருந்தால் போதும். தனித்து விநாயகர் இருக்கும் ஆலயத்திற்கும் செலல்லாம். விநாயகரை வழிபடும் முறை நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். காலை அல்லது மாலை அருகில் இருக்கும் விநாயகர் ஆலயம் செல்லுங்கள். உங்களுக்கு சௌகரியமான நேரத்தில் சௌகரியமான ஆலயம் சென்று வழிபடலாம். அங்கு இருக்கக்கூடிய விநாயகப் பெருமானை 21 முறை வலம் வர வேண்டும். இவ்வாறு 21 முறை வலம் வந்த பிறகு விநாயகப் பெருமானிடம் உங்களுடைய நிறைவேற வேண்டிய ஆசையைக் கூறி வழிபாடு செய்துவிட்டு பிள்ளையார் குட்டும், தோப்புக்கரணமும் போட்டுவிட்டு வரவேண்டும். அவருக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். அருகம்புல் வாங்கி கொடுக்கலாம். பிள்ளையாருக்கு உகந்த மலர்களை வாங்கி கொடுக்கலாம். இப்படி தொடர்ச்சியாக 21 நாட்கள் 21 முறை விநாயகரை சுற்றி வலம் வர வேண்டும்.
இப்படி வலம் வந்து உங்களுடைய நியாயமான ஆசையை விநாயகப் பெருமானிடம் வேண்டுதல் வைத்தால் அந்த 21 நாட்கள் நிறைவடைவதற்குள்ளாகவே உங்களுடைய ஆசைகள் நிறைவேறுவதற்குரிய வழிகளை விநாயகப் பெருமாள் அருள்வார் என்று கூறப்படுகிறது. உங்களுடைய ஆசைகள் நிறைவேறிய பிறகு தங்களால் இயன்ற அபிஷேக பொருட்களையும், வஸ்திரங்களையும் வாங்கி விநாயகப் பெருமானுக்கு சாற்றலாம் அல்லது விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது 21 நாட்களும் அசைவத்தை தவிர்க்க வேண்டும்
April 23, 2026