பிள்ளயாருக்கு வேண்டி செய்யப்படும் பல வழிபாடுகளுள் சிதறு தேங்காய் என்பது ஒன்றாகும். சிதறு தேங்காய்” என்பது, தேங்காயை தரையில் போட்டு உடைத்து, சில்லு சில்லாய் சிதற விடுவது ஆகும். இதனை சூரத் தேங்காய் என்றும் கூறுவார்கள். சகல தோஷங்களையும், பாவங்களையும் போக்கி செய்யவிருக்கும் செயலில் எந்தவொரு தடைகளும் ஏற்படாமல் இருக்க இந்த தேங்காயை உடைக்கும் பொழுது இந்த சிதறுகாய் உடைந்து சிதறுவது போல தடைகள் என்னைவிட்டு சிதறி ஓடவேண்டும் என்று விநாயகரை வழிபட வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறவும், தடைகள் நீங்கவும், சுப காரியங்கள் தடையின்றி நடந்தேறவும் பக்தர்கள் சிதறு காய் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.
சிதறு தேங்காய் உடைவதைப் போல நம் அகங்காரம் எல்லாம் சிதறுகிறது” என்று ஆன்மீகவாதிகள் தத்துவ விளக்கம் தருவார்கள். அது மட்டுமன்றி, சிதறு தேங்காய் சிதறுவது போன்று நம் துன்பங்களும் தடைகளும் தோஷங்களும் விநாயகர் அருளால் சிதறிப்போகும் என்றும் கூறுவார்கள். எப்படி தேங்காயை ஓடு மறைக்கின்றதோ அது போல அறியாமை என்னும் மாயையினால் ஜீவாத்மா பரமாத்மாவை உணராமல் நிற்கின்றது. இறைவன் சன்னிதியில் மாயையை அகற்றி இறைவனின் பேரருளை காட்டி பரமானந்த பேரமுதத்தை நுகரச்செய்யும் செயல்தான் சிதறு காய் போடுவதன் தத்துவமாகும்.
நாம் எந்தவொரு புதிய முயற்சிகள் மேற்கொண்டாலும், வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடந்தேறவும், வேண்டுதல் நிறைவேறவும், குடும்ப பிரச்சனைகள் தீரவும், தொழில் முன்னேற்றம் அடையவும் பிள்ளையாருக்குச் சிதறு தேங்காய் உடைப்பது வழக்கம். அதனை என்ன எண்ணிகையில் உடைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.
ஒன்று, மூன்று, என்று ஒற்றைப்படையில் தான் சிதறு தேங்காயை உடைக்க வேண்டும். இரண்டு, நான்கு என்கிற ரெட்டை படையில் சிதறு தேங்காயை உடைக்கக்கூடாது. பெண்கள் சிதறு தேங்காயை உடைக்கக்கூடாது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வீட்டில் கூட தேங்காயை உடைக்கக் கூடாது.
ஒரே ஒரு சிதறு தேங்காய் உடைப்பதால் நினைத்த அல்லது செல்லும் காரியம் தடை இல்லாமல் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை. தடைகளை தகர்த்தெறிய, ஒரு காரியத்திற்கு செல்லும் போது வழிப்பிள்ளையாருக்கு ஒரு சிதறு காயை உடைத்து விட்டு செல்லலாம்.
செய்யும் தொழிலில் உயர்ந்து காட்டவும், நல்ல வேலையில் அமர வேண்டும் என்று விரும்புபவர்களும், நோயால் வாடுபவர்களும் மூன்று தேங்காயை பிள்ளையாருக்கு சிதறு தேங்காயாக உடைத்து வேண்டுதல் வைக்க வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்க, ஞானம் உண்டாக பிள்ளையாருக்கு ஐந்து சூரத்தேங்காய்களை உடைத்து வழிபட வேண்டும்.
தீராத கடன் தொல்லைகள் தீர்ந்து, மன நிம்மதி கிடைக்க ஏழு சிதறு தேங்காய்களை உடைத்து பிள்ளையாரை வழிபடுங்கள்.
பிள்ளை இல்லாதவர்கள் புத்திர பாக்கியம் பெற புதன்கிழமையில் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் 9 தேங்காய்களை பிள்ளையாருக்கு உடைத்து வழிபட்டு வந்தால் குலவிருத்தி உண்டாகும்.
அதுபோல 11 சிதறு தேங்காய்களை உடைத்து பிள்ளையாருக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டால், திருமண தடைகள் அகலும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025