அமாவாசை, பௌர்ணமி ஆகிய திதிகள் முடிவிற்கு முன் ஒரு மணி நேரம் முன்னும் ஒரு மணி நேரம் பின்பும் ஆக இரண்டு மணி நேரமும் சோடசக்கலை நேரம். அதாவது அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும், பவுர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும் 16வதாக வரும் திதி நேரம் சோடசக்கலை நேரம். இந்த நேரம் அற்புதமான நேரம் ஆகும்.
சோடசக் கலை நேரத்தின் சிறப்பு என்ன
தை அமாவாசை மிகவும் சக்தி வாய்ந்த நாள் ஆகும். இந்த நாளில் வரக் கூடிய சோடசக் கலையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் மொத்தம் 30. அதில் வளர்பிறை திதி 14. தேய்பிறை திதி 14 மற்றும் அமாவாசை & பௌர்ணமி. இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதி தான் சோடசக்கலை. இது 5 நொடிப்பொழுதுகள் மட்டுமே இருக்குமாம். இந்த நேரம் திரிமூர்த்திகளின் ஆளுகைக்குள் இருக்கும் என்பது ஐதீகம். இந்த ஐந்து நொடி எப்போது எனத்தெரியாததால் இரண்டு மணி நேரமும் சோடசக்கலை தியானத்தில் இருக்க வேண்டும். அதாவது அமாவாசை முடிவதற்கு முன்பான ஒரு மணி நேரம் மற்றும் அமாவாசை முடிந்த பிறகு ஒரு மணி நேரமும் ( பிரதமை தொடங்கி ஒரு மணி நேரம்) தியானத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இன்றைய தின அமாவாசை நாளில் திருவோணம் நட்சத்திரம் இருப்பதால், அதுவும் புதன்கிழமையோடு சேர்ந்த இந்த நாள் வந்திருப்பதால், பெருமாளுக்கு ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. .
சோடசக் கலை நேர தியானத்தின் பலன்:
சக்தி வாய்ந்த இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் இந்த இந்த பூஜை அல்லது தியானம் மூலம் நீங்கள் வேண்டியதைப் பெறலாம் என்பது ஐதீகம். உங்கள் நியாயமான வேண்டுதல் எதுவாக இருநதாலும் அதனை இந்த நேரத்தில் நீங்கள் தியானித்து வேண்டுவதன் மூலம் கிடைக்கும். உங்கள் கடன் தீரும். பொருளாதார முன்னேற்றம் காணலாம். திருமணம் கை கூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றம் வேண்டுபவர்களுக்கு முன்னேற்றம் கிட்டும். இப்படி உங்கள் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது நிறைவேறும். ஆனால் உங்கள் வேண்டுதல் ஒன்றைப் பற்றி மட்டும் தான் இருக்க வேண்டும்.
சோடசக் கலை நேரம்:
இவ்வளவு சக்தி மற்றும் மகத்துவம் வாய்ந்த சோடசக்கலை நேரமானது நாளைய தினம் எப்போது வருகிறது என்று காணலாம். 29ஆம் தேதி தை அமாவாசை வந்தாலும், 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8:10 மணிக்கு அமாவாசை திதியானது பிறந்து விடுகிறது. மறுநாள் 29ஆம் தேதி புதன்கிழமை, இரவு 7:21 மணிக்கு அமாவாசை திதியானது நிறைவடைகிறது. அமாவாசை திதி தர்ப்பண காரியங்களை எல்லாம் 29ஆம் தேதி புதன்கிழமை காலையில் தான் செய்ய வேண்டும். சோடசக் கலை நேரம் 29-1- 2025 புதன்கிழமை மாலை 6:21 மணியிலிருந்து 8:21 மணி வரை ஆகும்.
சோடசக் கலை நேரத்தில் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பது மட்டும் இன்றி நீங்கள் லட்சுமி கடாட்சம் பெற்று பணக்காரர் ஆகவும், நிரந்தர செல்வம் பெறவும் சோடசக் கலை நேரத்தில் பின் வருவனவற்றை தவறாமல் செய்து பாருங்கள்.
∙ அன்றைய தினம் உங்கள் மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதம் அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுங்கள்.
∙ வீட்டை சுத்தமாகவும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டில் தூப தீபம் போட்டு சாம்பிராணி நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்.
∙ தெய்வத்திடம் நீங்கள் வேண்டும் கோரிக்கை (திருமணம், வேலைவாய்ப்பு, பொருளாதார மேன்மை, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறு தீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும்) ஏதாவது ஒரு கோரிக்கை மட்டும் கூறி சோடசக்கலை நேரத்தில் தியானம் அல்லது மந்திர ஜபம் இருக்க வேண்டும்.
∙ அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஆரம்பித்து திதி முடிந்து ஒரு மணி நேரம் வரை 2 மணி நேரம் தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.
∙ இந்த இரண்டு மணி நேர சோடசக்கலை நேரத்தில் ஏதாவது ஒரு 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தி (மும்மூர்த்தி) இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் தனது அருளை பொழிகிறார்.
∙ தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது உங்கள் கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்து விடும். அது உங்கள் உடல் மற்றும் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானிக்கும் வலிமையைப் பொறுத்தது.
∙ கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது. ஒரு வேண்டுதல் நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.
∙ இந்த சோடசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள், செல்வந்தர்களில் பலரும் அவர்களுக்கு வேண்டியதை பெற்று சிறப்பான நிலையில் இருக்கிறார்கள் என்பது ஐதீகம்.
∙ தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.
∙ வடகிழக்கு நோக்கி அமர்ந்து தியானம் அல்லது ஜபம் செய்யவேண்டும். வெறும் தரையில் உட்காரக்கூடாது.
∙ வயிறு காலியாக இருக்க வேண்டும்.
∙ சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்)
∙ .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் அமர வேண்டும்.
∙ உடைகள் தளர்வாக இருக்க வேண்டும்.
∙ உங்கள் கவனம் முழுவதும்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.
∙ வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
∙ சோடசக்கலை நேரத்தில் மும்மூர்த்திகளை வணங்கி தியானம் மேற்கொள்ளலாம். அல்லது மும்மூர்த்திகள் இணைந்த அம்சமான ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி தியானம் செய்யலாம்.
இந்த தியான நேரத்தில் கீழே உள்ள 6 மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.
1.ஓம் ரீங் சிவ சிவ
2.ஓம் ரீங் அங் உங்
3.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
4.ஓம் அமணலிங்கேஸ்வராய நமஹ
5.ஓம் த்ராம் தத்தாத்ரேயாய நமஹ
6.ஓம் குரு தத்த நமோ நமஹ
September 19, 2025
September 17, 2025
September 15, 2025