ஜென்ம பாவம் நீக்கும் தை அமாவாசை பரிகாரம் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஜென்ம பாவம் நீக்கும் தை அமாவாசை பரிகாரம்

Posted DateJanuary 26, 2025

மனிதப் பிறவி எடுத்த நாம் அனைவரும் நமது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இந்த உலகில் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம். இன்பங்களை அனுபவிப்பது எளிதாக இருக்கும். ஆனால் நாம் செய்த பாவங்கள் ஏற்படுத்தும் துன்பங்களை அவ்வளவு எளிதில் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த பாவங்களை கரைப்பதற்கான வழிகளை தேடிக் கொண்டிருப்போம். நாம் செய்த பாவத்தின் விளைவாக கடன் பிரச்சினை, நோய் நொடிகள், வேலையின்மை, மனப்பதட்டம் போன்றவற்றை அனுபவிக்க நேரும்.  இவற்றில் இருந்து தப்பிக்க உதவும் பரிகாரம் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பொதுவாக நாம் பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம் என்றாலும் சில சிறப்பான நாட்களில் செய்வது நமக்கு நல்ல பலனை பெற்றுத் தரும். அந்த நாட்களுள் அமாவாசையும் ஒன்றாகும். அமாவாசை முன்னோர்களுக்கு உரிய நாளாகும். அன்றைய தினம் அவர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது மட்டும் அன்றி சில தான தர்மங்களை மேற்கொள்வதன் மூலம் நமது பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் தீரும். அத்தகைய சிறப்பு வாய்ந்த அமாவாசையுள் தை அமாவாசை சிறப்பு வாய்ந்ததாகும். அன்று நாம் செய்யும் தானம் நம்மை முன்னோர்களின் சாபங்களில் இருந்து பாதுகாக்கும்.இந்த வருடம்  தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை ஜனவரி மாதம் 29ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது.

பொதுவாக அமாவாசை ஒவ்வொரு மாதமும் வந்தாலும் சில மாதங்கள் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது எனப் பல பதிவுகளில் நாம் பார்த்துள்ளோம். அவற்றுள் ஒன்று தான் தை அமாவாசை. அன்றைய தினம்,  தான தருமங்கள் செய்வது மட்டும் இன்றி நம்மை சுற்றி இருக்கும் விலங்கு பறவைகளுக்கும் உணவு அளிக்க வேண்டும். குறிப்பாக காகம் மற்றும் பசுவிற்கு கண்டிப்பாக உணவு அளிக்க வேண்டும். பொதுவாக தினந்தோறும் நாம் செய்யக்கூடிய தான தர்மம் என்பது நம்முடைய கர்ம வினைகளை போக்கும். அதிலும் குறிப்பாக அமாவாசை தினத்தில் நாம் எந்த ஒரு தான தர்மத்தை செய்தாலும் அது முன்னோர்களால் ஏற்பட்ட சாபத்தையும் தோஷத்தையும் நீக்கி முன்னோர்களின் அருளை நமக்கு பெறச் செய்யும். முன்னோர்களின் அருள் நமக்கு இருந்துவிட்டால் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தில் வெற்றிகள் உண்டாகும். மேலும் நம்முடைய வம்சம் வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே வரும்

 அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம் மற்றும் தானம்:

அமாவாசை அன்று ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் செய்வது சிறப்பு

அன்றைய தினம் மாலை 4 மணி முதல் 6  வரைக்குள் கோவிலில் இருக்கும் பசு மாட்டிற்கு மஞ்சள் நிற வாழைப் பழத்தை அளிக்க வேண்டும்.

பசுவின் உணவான தவிடு வாங்கி அதை நீரில் ஊற வைத்து அதில் கரும்பு சர்க்கரை கலந்து பசுமாட்டிற்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அளித்து வர கடன் தொல்லை தீரும்.

பசு மாட்டிற்கு அகத்திக் கீரை அளித்தால் தொழில் வளம் பெருகும்.

யானைக்கு  செவ்வாழை பழம் தருவதன் மூலம் விநாயகர் மற்றும்முருகன் அருள் கிட்டும்.

நாய்க்கு இனிப்பு வழங்குவதன் மூலம் மனப் பதட்டம் தீரும்.

நவதானியங்களை வாங்கி அத்துடன் கரும்பு சர்க்கரை கலந்து கையில் வைத்து பிசைத்து பறவைகளுக்கு உணவாகப் போட கடன் பிரச்சினை தீரும்.

இந்த அமாவாசை அன்று தவறாமல் காகத்திற்கு உணவளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கும் உணவில் சிறிது எள்ளையும் கலந்து அளிக்க நம்முடைய ஜென்ம பாபம் நீங்கும் என்பது ஐதீகம்.

. பசு மாட்டிற்கு எள்ளு புண்ணாக்கு வாங்கி கொடுக்க வேண்டும்.

 இவற்றை செய்வதன் மூலம்  மூலம் நம்முடைய முன்னோர்களின் சாபமும் தோஷமும் நீங்கி முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு நம்முடைய ஜென்ம பாவங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.