கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்பன் பூஜைக்கான ஆயத்தங்கள் துவங்கி விடும். ஐயப்பன் (அய்யப்பன்) என்பது “அய்யன்” மற்றும் “அப்பன்” என்பதிலிருந்து உருவானது, இரண்டுமே “தந்தை” என்று பொருள்படும். ஐயப்பனுக்கு சாஸ்தா, தர்மசாஸ்தா, மணிகண்டன் என வேறு திருநாமங்களும் உண்டு. ஐயப்பன் கலியுக வரதன் என்று வழங்கப் படுகிறார். ஐயப்ப பக்தர்கள் விரத சமயத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்வார்கள். பிரம்மச்சரியம், சைவ உணவு அல்லது விரதம் மற்றும் கருப்பு அல்லது நீல நிற ஆடை அணிவதன் மூலம் ஒரு சில வாரங்களுக்கு முன்பே யாத்திரைக்கான தயாரிப்புகளைத் தொடங்குகிறார்கள். ஐயப்ப பூஜையில் மண்டல பூஜை, மகர விளக்கு, மகர ஜோதி தரிசனம், மாதாந்திர பூஜை மற்றும் படி பூஜை என்று சொல்லப்படும் 18 படிகளுக்கும் நடைபெறும் பூஜையும் சிறப்பு வாய்ந்தது. நாம் இந்தப் பதிவில் படிப் பூஜை பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.
ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து கோவிலுக்கு செல்வார்கள். பொதுவாக கார்த்திகை மாதப் பிறப்பு நாளில் தங்கள் குருமார்களிடம் சென்று மாலை அணிந்து கொள்வார்கள். ஒரு சிலர் வீட்டிலேயே அணிந்து கொள்வார்கள். முதல் முதலாக சபரி மலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து செல்பவர்களை கன்னி சாமி என்று கூறுவார்கள். சபரி மலையீல் படி பூஜை நடைபெறும். அதற்கு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்காக பல வருடங்கள் கூட காத்திருக்க நேரும். அது மட்டும் இன்றி அதற்காக ஆகும் செலவும் அதிகம். எனவே இதனை அனைவராலும் செய்ய இயலாது என்றே கூற வேண்டும். என்றாலும் அதற்கு மாற்று வழியாக வீட்டிலோ அல்லது உள்ளூர் ஆலயத்தில் பதினெட்டு படி பூஜையை குருமார்களின் உதவியுடன் செய்யலாம். இந்த பூஜையில் குறிப்பாக கன்னி சாமிகள் கலந்து கொள்ள முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் இந்த பூஜையை இருமுடி கட்டும் தினத்தன்று செய்யலாம்.
பூஜைக்கு முதல் நாளே பூஜைக்கான ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும். முதலில் படி பூஜை செய்யம் இடத்தை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு அங்கு 18 படிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுதெல்லாம் ரெடிமேட் படிகள் கிடைக்கின்றன. பதினெட்டு படிகளிலும் பட்டு விரித்து, மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பதினெட்டாவது படியில் ஐயப்பனின் திருவுருவ சிலையையோ அல்லது படத்தையோ வைக்க வேண்டும். அவருக்கு வலது புறத்தில் கன்னி மூலை கணபதியான விநாயகர் படத்தினை வைக்க வேண்டும். இடதுபுறத்தில் மாளிகைபுரத்து அம்மனை வைக்க வேண்டும். பிறகு மூன்று கடவுளரையும் கிரமப்படி ஆவாஹனம் செய்ய வேண்டும். நாம் படி அமைத்து வழிபடும் இடத்தையே, அது வீடாக இருந்தாலும் சரி கோவிலாக இருந்தாலும் சபரி மலையாக நினைத்து வழிபாடு நடத்த வேண்டும். வினாயருக்கு பூஜை செய்யவேண்டும்.பிறகு மாளிகை புறத்து அம்மனை ஆவாகனம் செய்து முறைப்படி பூஜை செய்ய வேண்டும். பிறகு ஐயப்ப பூஜையைத் தொடங்க வேண்டும். பிறகு ஐயப்பன் படத்தை மாலை மற்றும் தோரணங்களால் நன்கு அலங்காரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு படியிலும் தேங்காய், மலர்கள், விளக்கு வைத்து பூஜைகள் செய்ய வேண்டும். ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்ற வேண்டும்.
பிறகு சாஸ்தா பஞ்ச ரத்னம் மற்றும் ஐயப்பன் 108 போற்றி கூறி துதிக்க வேண்டும்.
‘லோக வீரம் மகா பூஜ்யம்
சர்வ ரக்ஷா கரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்!
ஓம் சாமியே சரணம் ஐயப்பா!
விப்ர பூஜ்யம் விஸ்வ வந்தயம்
விஷ்ணு சம்போ பிரியம் சுதம்
ஷிப்ரப் பிரசாத நிரதம்
ப்ரணமாம்யஹம்!
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
பூதநாத சதானந்த
சர்வ பூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே திவ்யம் நமோன் நமஹ
ஓம் சாமியே சரணம் ஐயப்பா!”
சாஸ்தா பஞ்சரத்னத்தை குரு சுவாமி துதிக்க மற்ற சுவாமிமார்கள் அதைக் கூற வேண்டும். பின் நாமாவளி கூறி பூக்கள் மற்றும் துளசி கொண்டு அரச்சனை செய்ய வேண்டும். . பின்பு காயத்ரி மந்திரம் மற்றும் சிவ, பிரம்ம, விஷ்ணு மந்திரங்களைக் கூறியபடி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பிறகுசுவாமியே சரணம் ஐயப்பா என்னும் கோஷங்களை எழுப்பி ஐயப்பன் பஜனைப் பாடல்களைப் பாட வேண்டும். பிறகு நைவேத்தியம் செய்து பிரசாதம் அளிக்க வேண்டும். அன்னதானம் செய்வது சாலச் சிறந்தது. பதினெட்டாம் படிகளுக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பதோடு சபரிமலை ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஓம் பூதநாதய வித்மஹே ப
வ நந்தநாய தீமஹி
April 23, 2026