இன்றைய தினம் 26-6-2025 வியாழக்கிழமை ஆஷாட நவராத்திரியின் தொடக்கம். இந்த விழா ஆஷாட குப்த நவராத்திரி என்றும் அழைக்கப்படும். குப்த என்றால் மறைவாக என்று பொருள். பொதுவாக நாம் நவராத்திரி என்றால் கொலு வைத்து அனைவரயும் அழைத்து பூஜை, பஜனை,பாடல்கள் சுண்டல் விநியோகம் என்று கொண்டாடுவோம். நம் இல்லப் பூஜைக்கு அனைவரயும் வர வழைத்து மகிழ்வோம். ஆனால் குப்த நவராத்திரி என்பது நாம் நமக்கென்று வழிபட வேண்டிய நாள். இந்த நாட்களில் நாம் வாராஹி அன்னையை மந்திரம் கூறி பூஜிப்பதன் மூலம் வாராஹியின் அருளை நாம் பெற இயலும்.
பொதுவாக வாராஹி வழிபாடு செய்பவர்கள் வாராஹி திருவுருவச் சிலை அல்லது திருவுருவப் படம் வைத்து பூஜை செய்வது வழக்கம். வாராஹி பூஜையை இரவில் மேற்கொள்வதன் மூலம் அதிக பலன்கள் கிடைக்கும்.சிலை அல்லது படம் வைத்து விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து, மலர்கள் சாற்றி அலங்காரம் செய்து, தூப தீப ஆராதனைகளை மேற்கொண்டு, வாராஹிக்கு உகந்த பொருட்களை நெய்வேத்தியம் செய்து பூஜையை நிறைவு செய்யலாம். மேலும் இந்த நவராத்திரி நாட்கள் இந்த பூஜையை மேற்கொள்வதன் மூலம் வாராஹி அன்னையின் அபரிமிதமான பலன்கள் நமக்கு கிட்டும். முடிந்தவர்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் வாராஹி ஆலயம் அல்லது சந்நிதிக்கு சென்று வழிபட கைமேல் பலன் கிட்டும்.
ஆனால் நாம் வாழ்வதோ அவசர கதியில். இந்த ஒன்பது நாட்களும் இந்த பூஜைகளை மேற்கொள்ள நேரம் இல்லை. அவகாசம் இல்லை என்று கருதுபவர்கள் வாராஹியின் நாமத்தைக் கூறினாலே போதும். ஆஷாட நவராத்திரி நாட்கள் முழுவதும் காலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சில புஷ்பங்களால் அம்பாளின் திருவுருவப்படத்திற்கு, அர்ச்சனை செய்துவிட்டு, வாராஹியின் மந்திரத்தைக் கூற வேண்டும். . தினமும் இரண்டு வாழைப்பழங்கள் வாங்கி பூஜை அறையில் வாராகிக்காக வைத்தாலே போதும். அன்னை அதனை ஏற்றுக் கொண்டு மனமுவந்து உங்களுக்கு அருள் பொழிவாள். ஆனால் ஓரு சிலருக்கு இதுவும் முடியாத நிலை இருக்கும். நவராத்திரி என்றால் வீட்டில் கலசம் நிறுத்தி வாராகி சிலை வைத்து, வாராகி திரு உருவப்படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. நீங்கள் மனதால் நினைத்தாலே போதுமானது. மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் சுயநலம் இல்லாமல், அடுத்தவர்களை கெடுக்கக்கூடிய நோக்கம் இல்லாமல், வாராகியை யார் வழிபாடு செய்தாலும் சரி, வாராஹியின் பரிபூரண ஆசி அவர்களுக்கு கிடைத்துவிடும்.
முதலில் பின் வரும் வாராஹியின் சக்தி வாய்ந்த பீஜ மந்திரத்தைக் கூறுங்கள்.
ஓம் ஐம் வாராகி நமஹ ! ஓம் க்லீம் வாராகி நமஹ ! ஓம் க்ரூம் வாராகி நமஹ ! ஓம் ரம் வாராகி நமஹ ! – ஓம் லம் வாராகி நமஹ ! ஓம் யம் வாராகி நமஹ ! ஓம் ரம் வாராகி நமஹ ! ஓம் வ வாராகி நமஹ ! ஓம் சௌ வாராகி நமஹ ! ஓம் ஹ்ரீம் வாராகி நமஹ !
பிறகு கீழ்வரும் இந்த மந்திரத்தைக் கூறுங்கள்.
ஓம் ஐம் க்ளெளம் பஞ்சமியை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் தண்டநாதாயை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் சங்கேதாயை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் சமயேஸ்வரியை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் சமயசங்கேதாயை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் வாராஹியை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் போத்ரிணியை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் சிவாயை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் மஹாசேனாயை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் அரிக்னியை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் வராஹி நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் வராஹிதேவியை நமஹ.
பொதுவாகவே இந்த பாடலை தினமும் பாடி வந்தாலே எப்படிப்பட்ட துன்ப நிலையும் மாறி, இன்பம் உண்டாகும். அதுவும் ஆஷாட நவராத்திரி நாளில் சொல்லி வழிபட்டால் இன்பங்களை வாராஹி அம்மன் அள்ளிக் கொடுப்பாள். எதிரிகள் தொல்லை நீங்கும். கண் திருஷ்டி நீங்கும். நிலையான செல்வமும், வெற்றியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எப்படிப்பட்ட நெருக்கடியான நிலையும் மாறும். பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை நீங்கும்.
April 23, 2026