இந்த பிரபஞ்சத்தில் அனைத்து செல்வமாகவும் விளங்குபவள் மகாலட்சுமி. தனம், தான்யம், சந்தானம், சௌபாக்கியம், தைரியம், வீர்யம், வெற்றி, மன அமைதி என அனைத்தையும் வழங்குபவள் அவள். லட்சுமி இருக்கும் இடத்தில் அஷ்ட ஐசுவரியங்களும் இருக்கும். எனவே நாம் வசிக்கும் வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்க நாம் லக்ஷ்மி தேவிக்கு உரியவைகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும். லக்ஷ்மி தேவிக்கு விருப்பமான பொருட்களை நாம் வீட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் லட்சுமி தேவி ஈர்க்கப்படுவாள். நம் வீட்டில் தங்குவாள் என்பது ஐதீகம். அதன் மூலம் நம் வீட்டில் செல்வம் பொங்கும்.
குந்தித் தின்றால் குன்றும் குறையும் என்று கூறுவார்கள். செல்வம் இருப்பவர்கள் கூட முயற்சி இன்றி அதைப் பயன்படுத்தினால் அது குறைந்து தான் போகும். எனவே நமதுமுயற்சி என்பதும் முக்கியம் ஆகும். ஆனால் முயற்சி மட்டும் போதாது. இறை அருள் மற்றும் அதிர்ஷ்டமும் நமக்கு கைக் கொடுக்க வேண்டும். அனைத்து செல்வங்களுக்கும் அதிபதி லக்ஷ்மி தேவி. லக்ஷ்மி தேவியின் அருள் இல்லாமல் எவராலும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று புராணங்கள் கூறுகிறது. கடின உழைப்பு, விடாமுயற்சி இவற்றுடன் லக்ஷ்மி தேவியின் அருளும் இருந்தால் ஒருவரின் முன்னேற்றம் அளப்பரியதாய் இருக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்க செல்வம் பெருக சில பொருட்களை முறையாக வைத்துக் கொள்வதும் அவசியம் ஆகும். அவ்வாறு அவளின் அருள் கிட்ட வீட்டில் என்னென்ன பொருட்கள் வைக்க வேண்டும் என்று காண்போம்.
நாம் பொதுவாக லக்ஷ்மி தேவியை ஈர்க்கக் கூடிய பொருட்கள் பற்றி பெரும்பாலும் அறிந்து இருப்போம். வீட்டில் கல்கண்டு வைத்துக் கொள்வது வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்கி வைப்பது போன்றவை நாம் அறிந்ததே. இந்தப் பதிவில் லக்ஷ்மி தேவிக்கு உகந்த, அவள் வரவை ஈர்க்கும் மூன்று மூலிகை பொருட்கள் பற்றிக் காணலாம். லட்சுமி தேவிக்கு வாசனை திரவிங்கள் மிகவும் பிடிக்கும். எனவே வீட்டில் வாசனைத் திரவியங்களை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
இவற்றுள் மூன்று பொருட்கள் முக்கியமானது அவை கோரோசனை, புணுகு, மற்றும் ஜவ்வாது ஆகும். இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றின் நறுமணம் வீட்டில் இருந்தால் செல்வத்தை ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும். இந்த நறுமணம் இறை அருளை வீட்டில் தக்க வைத்திருக்கும். அதன் மூலம் செல்வம் பெருகும்.
இறை சக்தியை ஈர்க்கும் மூலிகைகளுள் கோரோசனை முக்கியமானது ஆகும். இது பசுவில் இருந்து கிடைக்கக் கூடியது. பிறந்த குழந்தைக்கு சேர்க்கும் கை மருந்தில் கூட இதனை இழைத்து கொடுப்பார்கள். பசுவில் இருந்து கிடைக்கக் கூடிய இந்த மூலிகையை வீட்டில் வைத்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல் தேன் அல்லது பால் அல்லது நெய் ஆகியவற்றுடன் குழைத்து நெற்றியில் திலகம் போல வைத்துக் கொண்டு சென்றால் எந்த விதமான காரியங்களும் தடை இல்லாமல் ஜெயமாகும் என்பது ஐதீகம்.
அடுத்து புணுகு. இதுவும் வாசனைத் திரவியங்களுள் ஒன்று ஆகும். காட்டில் வாழும் புணுகுப் பூனையில் இருந்து இது கிடைக்கப் பெறுகிறது. கோவில்களில் மூல்வர்களுக்கு இதனைச் சாற்றுவார்கள். திருப்பதி வெங்கடாஜலபதிக்கும் வெள்ளிக்கிழமைகளில் புனுகு சாற்றல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. புணுகு திருமண தடை, புத்திர பாக்கிய தடை, தொழில் தடை, பில்லி சூனியம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கவும், வசிய பரிகாரங்கள் செய்யவும் பயன்படுத்தப்படும்.இதனை வீட்டில் வைத்திருப்பதன் மூலம் லக்ஷ்மி கடாட்சம் பொங்கும்.
மூன்றாவதாக இடம் பெற்றிருப்பது ஜவ்வாது. ஜவ்வாது நறுமணம் மிக்க ஒரு தெய்வீகமான பொருள் ஆகும். இதிலிருந்து கிடைக்கும் வாசம் எல்லாவிதமான எதிர்மறை ஆற்றல்களையும் நம்மிடமிருந்து விலக்கி வைக்கும் தன்மை கொண்டது. குழந்தைகளுக்கு ஜவ்வாது பூச, திருஷ்டிகள் அகலும்.
இந்த மூன்று பொருட்களையும் வீட்டில் ஒரு சம்புடத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். காலையில் நீங்கள் குளித்து விட்டு பூஜை அறையில் பூஜை செய்யும் போது அந்த சம்புடத்தை திறந்து அதற்கும் தூப தீபம் காட்டுங்கள் தினமும் முடியாவிடில் பிரதி வெள்ளிக்கிழமை செய்வது நன்று.
இவ்வாறு தொடர்ந்து செய்து வர நீங்கள் வீட்டில் ஒரு நேர்மறை மாற்றத்தைக் காணலாம். படிப்படியாக உங்கள் வாழ்க்கைத் தரம் மாறுவதை நீங்கள் கண்கூடாகக் காணலாம்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025