இது நவராத்திரி சமயம். முதல் மூன்று நாட்கள் துர்கை வழிபாடு. அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கான வழிபாடு நடக்கும்.
பொதுவாக நவராத்திரி வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் அருளும் வழிபாடு ஆகும். முப்பெருந்தேவியரை போற்றி வழிபடும் பொழுது அவர்களின் அருளாசிகள் நமக்கு கிட்டும். குறிப்பாக பெண் சக்தியின் ஆற்றல் மிகுந்த இந்த ஒன்பது நாட்கள் வழிபாடு நம் வாழ்வில் செழிப்பை அள்ளித் தரும்.
நவராத்திரி ஆறு நாட்கள் முடிந்து ஏழாவது நாள் அன்று சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும். சரஸ்வதி தேவிக்கு வாணி, வாக் தேவி என்ற பெயர்களும் உண்டும். கலைகளுக்கு எல்லாம் அதிபதியாக விளங்குபவள் சரஸ்வதி தேவி. கல்வி பயிலும் மாணவர்கள் இந்த தேவியை வணங்குவதன் மூலம் சிறந்த ஞானம் பெற முடியும். மேலும் இசை, நடனம், ஓவியம், சிற்பம் போன்ற கலைகளை கற்கும் கலைஞர்களும் இவளை வணங்குவதன் மூலம் கலைகளில் திறமையுடன் செயல்படலாம்.
சரஸ்வதி ஆவாகனம்: ஆவாகனம் என்பது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும். இப்பூசை முறையானது தசோபசாரம் எனும் பத்துவகையான உபசார முறைகளிலும், சோடசோபசாரம் எனும் பதினாறு வகையான உபசார முறைகளிலும் அடங்குவதாகும். இறைவனின் மூல மந்திரத்தினை உச்சரித்து பூசையின் பொழுது இறைவனை எழுந்தருளும் படி அழைப்பதாகும். அந்த வகையில் நவராத்திரி நாட்களில் வரும் மூலம் நட்சத்திரம் அன்று சரஸ்வதி தேவியை ஆவாகனம் செய்ய வேண்டும்.
ஆவாகனம் செய்யும் முறை: மூலம் நட்சத்திரம் அன்று வழக்கம் போல செய்யும் விளக்கேற்றுதல் மற்றும் பிற பூஜைகளை செய்ய வேண்டும். ஒரு மேடை அல்லது மனையில் சரஸ்வதி தேவி படம் அல்லது விக்கிரகம் வைக்க வேண்டும். அதற்கு முன் குழந்தைகளின் நோட்டு மற்றும் புத்தங்களில் சிலவற்றை வைக்க வேண்டும். பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்களையும் வைக்க வேண்டும். இசைக் கலைஞர்கள் தங்கள் இசைக் கருவிகளை படத்திற்கு முன் வைக்க வேண்டும். பிறகு படம் அல்லது விக்கிரகத்திற்கு முன் இரண்டு விளக்குகளை ஏற்ற வேண்டும். பின்னர் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் குங்குமம், அட்சதை சாற்ற வேண்டும். மலர்கள் சாற்ற வேண்டும். பிறகு அர்ச்சனை செய்ய வேண்டும். தூப தீப ஆராதனைகள் செய்து அவரவர் குல வழக்கபடி நைவேத்தியம் செய்ய வேண்டும்.
நவராத்திரியின் நிறைவு நாளான ஒன்பதாவது நாளை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையாகவும், நிறைவான பத்தாவது நாளை விஜயதசமியாகவும் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை அக்டோபர் 11ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
சரஸ்வதி தேவி கலைகளுக்கு அதிபதி. ஞான ஸ்வரூபிணி. ஞான சக்தியாக விளங்குபவள். நாம் கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபட வேண்டும். கலவி மட்டும் இன்றி இசை, மற்றும் பிற கலைகளுக்கும் இவளைத் தான் வணங்க வேண்டும். நல்ல பேச்சாற்றல் பெற சரஸ்வதி தேவியின் அருள் நமக்கு வேண்டும். சரஸ்வதி பூஜை அன்று நாம் முதலிலேயே ஆவாகனம் செய்த படம் அல்லது விக்கிரகம் மற்றும் புத்தகங்களுக்கு விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினம் அவற்றை எடுக்கக் கூடாது மறு நாள் விஜயதசமி அன்று மீண்டும் பூஜை செய்து விட்டு படத்தை அல்லது விக்கிரகத்தை வழக்கம் போல வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். குழந்தைகளை புத்தகம் எடுத்து படிக்கச் சொல்ல வேண்டும். அதே போல இசைக் கருவிகளையும் சரஸ்வதி பூஜை அன்று பூஜை செய்துவிட்டு விஜயதசமி அன்று எடுத்து இசைக்க வேண்டும். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் சரஸ்வதி தேவியின் அருளைப் பெற முடியும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள்.
நமது இந்து மத வழிபாட்டில் யந்திர வழிபாடும் முக்கியமானதாகும். ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு வகையாக யந்திரங்கள் அமைப்பார்கள். யந்திரம் என்பது கடவுளின் அம்சமாக கருதப்படுகிறது. சரஸ்வதி பூஜை அன்று வீட்டின் பூஜை அறையில் பச்சரிசி மாவினால் சரஸ்வதி யந்திரத்தை கோலமாக வரைந்து அதன் மத்தியில் ஒரே ஒரு பூவை வைக்க வேண்டும். சரஸ்வதி படம் மற்றும் விக்கிரகத்திற்கு தீபாராதனை காட்டும்போது யந்திரத்திற்கும் காட்டி வழிபட வேண்டும். இந்த யந்திரம் சரஸ்வதி தேவியின் முழுமையான சக்தியையும் உள்ளடக்கியதாகும். இது அமைதி, ஞானம், படைப்பாற்றல், புத்தி கூர்மை, நினைவாற்றல் ஆகியவற்றை வழங்கக் கூடியது. இதை சரஸ்வதி பூஜை அன்று மட்டும் இல்லாத அனைத்து நாட்களிலும் குழந்தைகள் படிக்கும் அறைகளில் ஒரு பேப்பரில் வரைந்து வைக்கலாம். இந்த யந்திரத்தின் முன் அமர்ந்து “ஓம் ஐம் ஐம் ஐம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் சரஸ்வத்யை நமஹ” என்ற மந்திரத்தை 21 முறை முதல் 108 முறை வரை சொல்வது சிறப்பு. இந்த மந்திரத்தை எந்த வயதினரும் சொல்லலாம். இதனால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, அற்புதமான பேச்சாற்றல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
காமராஜாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
3. சரஸ்வதி துவாதச நாமாவளி :
” ஓம் பாரதியை நமஹ
ஓம் சரஸ்வதியை நமஹ
ஓம் சாரதாயை நமஹ
ஓம் ஹம்ஸவாஹின்யை நமஹ
ஓம் ஜகதிக்யாதாயை நமஹ
ஓம் வாகீஸ்வர்யை நமஹ
ஓம் கெளமார்யை நமஹ
ஓம் பிரம்மசாரின்யை நமஹ
ஓம் புத்திதாத்ரி நமஹ
ஓம் வரதாயின்யை நமஹ
ஓம் க்ஷ்த்ரகண்டா நமஹ
ஓம் புவனேஸ்வர்யை நமஹ”
மேலே கூறிய மந்திரங்கள் மட்டும் இன்றி சரஸ்வதி தேவிக்கு உரிய பாடல்கள் மற்றும் சரஸ்வதி சகலகலா வல்லி மாலை பாடலையும் பாராயணம் செய்யலாம். குறிப்பாக மாணவர்கள் இந்த பாடலை சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அன்றி தினமும் படித்து வருவதால் கல்வியில் சிறப்படைவார்கள். குறிப்பாக சரஸ்வதி பூஜை அன்று இந்த பாடல்களை பாராயணம் செய்வது நல்லது.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025